எல்லாவிதமான சுரண்டல் மற்றும் பாரபட்சத்திலிருந்து பெண்கள் விடுதலை கோருகின்றனர்
இந்திய கம்யூனிஸ்ட் கெதர் கட்சியின் மத்தியக் குழுவின் அறிக்கை, மார்ச் 4, 2024
2024 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தில், பெண்களாகவும், தொழிலாளர்களாகவும், மனிதர்களாகவும் தங்கள் உரிமைகளைக் கோரி துணிவோடு குரல் எழுப்பும் நம் நாட்டிலும் உலகெங்கிலும் உள்ள பெண்களை இந்திய கம்யூனிஸ்ட் கெதர் கட்சி பாராட்டுகிறது.
தொழிலாளர்களாக தங்கள் உரிமைகளுக்காக உறுதியான போராட்டம் நடத்தி வரும் ஆஷா மற்றும் அங்கன்வாடித் தொழிலாளர்களை நாம் வணக்குகிறோம். பணியிடத்தில் பாரபட்சம் மற்றும் பாலியல் துன்புறுத்தல்களை துணிவோடு எதிர்த்து வரும் பெண் மல்யுத்த வீராங்கனைகள், செவிலியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிறருக்கு நாம் வணக்கம் செலுத்துகிறோம்.
தங்களின் விளைபொருட்களுக்கு கட்டுப்படியாகக் கூடிய விலை கிடைக்க வேண்டும் என்ற நியாயமான கோரிக்கைக்காக, அரசின் தடியடிகளுக்களும், தோட்டாக்களுக்கும் அஞ்சாமல் துணிந்து நின்று போராடிவரும் இலட்சக்கணக்கான விவசாயிகள், பெண்கள் மற்றும் ஆண்களுக்கு நாங்கள் தலை வணங்குகிறோம். பொதுச் சொத்துக்களும் சேவைகளும் தனியார்மயமாக்குவதற்கு எதிராகவும், அரசு திட்டமிட்டு நடத்தும் வகுப்புவாத வன்முறை மற்றும் அரசு பயங்கரவாதத்திற்கு எதிராகவும், வாழ்வாதாரத்திற்காகவும், நல்ல வாழ்க்கை நடத்தக்கூடிய ஊதியத்திற்காகவும், பெண்களுக்கு எதிரான எல்லா வகையான பாரபட்சத்திற்கும் வன்முறைக்கும் எதிராகவும் போராட்டத்தின் முன்னணியில் நின்று போராடிவரும் பல இலட்சக்கணக்கான நமது நாட்டு பெண்களோடு நாம் நிற்கிறோம்.
முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிராகவும், தங்கள் வாழ்வாதாரம் மற்றும் உரிமைகளுக்காகவும் உலகெங்கிலும் வீதிகளில் இறங்கியுள்ள பெண்களுடன் நாங்கள் நிற்கிறோம். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முழு இராணுவ மற்றும் அரசியல் ஆதரவுடன் இஸ்ரேல் கட்டவிழ்த்து விட்டுள்ள இனப்படுகொலைப் போரை எதிர்கொண்டு, ஒரு மக்களாக இருப்பதற்கான உரிமைக்காகப் போராடும் பாலஸ்தீனத்தின் வீரமிக்க மக்களோடு முழு ஒற்றுமையோடு நாம் நிற்கிறோம். பல்வேறு கண்டங்களில் பிற்போக்குத்தனமான போர்களை கட்டவிழ்த்துவிட்டு, நாடுகளை அழித்து, மக்களை அகதிகளாக மாற்றும் ஏகாதிபத்திய சக்திகளை நாம் கண்டிக்கிறோம்.
சமூகத்தில் பெண்கள் கீழாக நடத்தப்படுவதற்கு மூலகாரணம், சமுதாயம் வர்க்கமாகப் பிளவுண்டு இருப்பதாகும். சமுதாயத்தில் ஒரு வர்க்கத்தால் மற்றொரு வர்க்கம் சுரண்டப்படுவது நீடிக்கும் வரை பெண்கள் ஒடுக்கப்பட்டவர்களாகவே இருப்பார்கள். வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உழைக்கும் பெண்களின் தலைவர்கள் இதை 100 ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்துள்ளனர். கம்யூனிஸ்ட் பெண்களின் முன்முயற்சியால்தான் 1911ஆம் ஆண்டு முதன்முறையாக மார்ச் 8ஆம் தேதி சர்வதேச உழைக்கும் மகளிர் தினமாகக் கொண்டாடத் தொடங்கியது. முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்திற்கு மாறுவதன் மூலம் மனித உழைப்புச் சுரண்டலை ஒழிக்கும் போராட்டமே பெண்களின் விடுதலைக்கான பாதை என்று அவர்கள் அறிவித்தனர்.
பெண்களுக்கு அதிகாரம் அளிக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாக இந்திய ஆட்சியாளர்கள் கூறுகின்றனர். நம் நாட்டில் பெண்கள் பல தொழில் துறைகளிலும் சேவைகளிலும் சாதனைகள் படைத்து முத்திரை பதித்திருப்பதை அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். பெண்கள் தங்கள் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒடுக்குமுறை மற்றும் பாகுபாடுகளுக்கு எதிராக மிகக் கடுமையான போராட்டத்தின் மூலம் இந்த வெற்றிகளைப் பெற்றிருக்கிறார்கள் என்பது மறைக்கப்பட்ட உண்மையாகும். நமது சமுதாயத்தில் பெரும்பான்மையான பெண்கள் எதிர்கொள்ளும் நிலைமைகளின் கொடூரமான யதார்த்தத்தை இது மறைக்கிறது.
நம் நாட்டில் பெண்கள் பலவிதமான சுரண்டலுக்கு ஆளாகிறார்கள். அவர்கள் முதலாளித்துவ சுரண்டல், சாதிய பாகுபாடு மற்றும் பெண்களை இழிவுபடுத்தி, அடக்குமுறையை நியாயப்படுத்தும் ஏராளமான பிற்படுத்தப்பட்ட சமூக பழக்கவழக்கங்கள் மற்றும் நடைமுறைகளால் பாதிக்கப்படுகின்றனர். சாதி மற்றும் பாலின அடிப்படையிலான பாரபட்சம் மற்றும் ஒடுக்குமுறையை நீடிக்கச் செய்வதன் மூலம் முதலாளித்துவம் நமது நாட்டில் வளர்ந்துள்ளது. சமூகத்தில் பெண்களின் கீழ்நிலையைப் பயன்படுத்தி, அவர்களைக் கடுமையாகச் சுரண்டுவதன் மூலம் முதலாளித்துவ இலாபத்தை அதிகரிக்க உதவுகிறது.
வாழ்வாதாரத்திற்காக உழைப்பது மற்றும் புதிய தலைமுறையை தாங்கி வளர்ப்பதென பெண்கள் இரட்டைச் சுமையை சுமக்கிறார்கள். இந்தியாவின் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள பெரும்பான்மையான பெண்கள் மற்றும் சிறுமியர்களுக்கு கல்வி, போதுமான ஊட்டச்சத்து மற்றும் அடிப்படை சுகாதாரம் மற்றும் மகப்பேறு சேவைகள் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. ஒரே வேலைக்கு ஆண்களை விட குறைவான ஊதியம் அவர்களுக்கு வழங்கப்படுகிறது, மேலும் வேலையில் இருந்து பெண்கள் தான் முதலில் தூக்கி எறியப்படுகிறார்கள். அனைத்து வகையான வகுப்புவாத மற்றும் மதவெறி வன்முறைகளிலும் பெண்கள் மிக மோசமாகப் பாதிக்கப்படுகின்றனர். குடும்பப் பரம்பரைச் சொத்தில் சமமான பங்கு அவர்களுக்கு மறுக்கப்படுகிறது. பாலியல் இச்சைகளை திருப்தி செய்யவும், கடுமையாகச் சுரண்டவும் கூடிய பொருள்களாக பெண்கள் நடத்தப்படுகின்றனர். அதிகாரத்துவம், காவல்துறை மற்றும் நீதிமன்றங்கள் உட்பட அரசின் நிறுவனங்கள் வெளிப்படையாகவே பெண்களுக்கு எதிராக பாரபட்சம் காட்டுகின்றன. மேலும் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் பல குற்றங்களுக்கு பாதிக்கப்பட்ட பெண்கள் மீதே பழிசுமத்தி பொறுப்பாக்குகின்றன.
பெண்கள் மீதான பாகுபாடு மற்றும் ஒடுக்குமுறை தொடர்வதற்கான அடிப்படைக் காரணம், முழுப் பொருளாதார அமைப்பும், அதனைக் கட்டிக்காக்கும் அரசும், ஏகபோக குடும்பங்கள் தலைமையிலான முதலாளி வர்க்கமான செல்வச் சிறுபான்மையினரை மேலும் கொழுக்கச் செய்து வருகிறது என்பதாகும்.
முதலாளி வர்க்கம் தான் இந்த நாட்டை ஆள்கிறது. தற்போதுள்ள பாராளுமன்ற அமைப்பு மற்றும் பல கட்சி பிரதிநிதித்துவ சனநாயகத்தின் அரசியல் செயல் வழிமுறையில், ஆளும் வர்க்கத்தின் நிகழ்ச்சி நிரலை விசுவாசத்தோடு செயல்படுத்தும் அரசியல் கட்சிகளின் கைகளில் முடிவெடுக்கும் அதிகாரம் குவிந்துள்ளது.
“மக்கள்தான் தங்கள் அரசாங்கத்தை தேர்வு செய்கிறார்கள்” என்ற மாயையை நீடிக்கச் செய்யும் அதே வேளையில், தங்கள் பண பலம் மற்றும் ஊடகங்கள் மீதான கட்டுப்பாடு மற்றும் வாக்காளர் பட்டியல்களையும் வாக்குப்பதிவு மின் இயந்திரங்களையும் (EVM) சூழ்ச்சியாகப் பயன்படுத்துவது ஆகியவற்றின் மூலம் ஏகபோக முதலாளித்துவக் குடும்பங்கள் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கின்றன.
தேர்தலில் நிறுத்துவதற்கு தங்கள் வேட்பாளர்களைத் தீர்மானிக்கவோ, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை தங்களுக்கு பதில் சொல்லக் கடமைப்பட்டவர்களாக வைத்திருக்கவோ, அவர்களைத் திரும்ப அழைக்கவோ மக்களிடம் எந்த வழிமுறையும் இல்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் வாக்காளர்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள் அல்ல, மாறாக அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சியின் உயர்மட்டத்திற்குத் தான் பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறார்கள். சட்டங்களை உருவாக்கவோ அல்லது சட்டங்களில் திருத்தங்களைச் செய்வதற்கான வழிமுறைகளோ மக்களிடம் இல்லை.
அனைத்து சட்டமன்ற அமைப்புகளிலும் பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டை கட்டாயமாக்கும் சட்டம் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது. அது, அதிக எண்ணிக்கையில் பெண்கள் அதிகாரப்பூர்வ பதவிகளை வகித்தால் பெண்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். சட்டமன்றப் பதவிகளில் அதிகமான பெண்கள் இடம் பெறுவது அதிகாரம் பற்றிய மாயையை மட்டுமே உருவாக்கும். இத்தகைய மாயைகளை உருவாக்குவது முதலாளி வர்க்க ஆட்சி முறையின் ஒரு அங்கமாகும்.
பாராளுமன்றத்தில் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம், அரசியல் அதிகாரத்தின் வர்க்கத் தன்மையை மாற்றாது. தற்போது ஆண்டு வரும் அதே வர்க்கத்தின் ஆட்சி தொடரும். முதலாளித்துவ சுரண்டல் முறையை அரசு தொடர்ந்து கட்டிக் காக்கும். அது தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள், பெண்கள் மற்றும் ஆண்களின் உரிமைகளை அப்பட்டமாகத் தொடர்ந்து மீறும். பெரும்பான்மையான பெண்களும் ஆண்களும் முடிவெடுக்கும் அதிகாரத்தில் இருந்து தொடர்ந்து விலக்கி வைக்கப்படுவார்கள்.
பெண்களுக்கு மனிதர்களாகவும், சமூதாயத்தின் உறுப்பினர்களாகவும் உரிமைகள் உள்ளன. மனித வாழ்வின் மறுஉற்பத்தியில் அவர்கள் வகிக்கும் முக்கிய பங்கின் காரணமாக, பெண்களாகவும் அவர்களுக்கு உரிமைகள் உள்ளன. முதலாளித்துவ சமுதாயமும் தற்போதுள்ள அரசும் அனைத்து பெண்களுக்கும் இந்த உரிமைகளை உத்தரவாதப்படுத்தவில்லை.
ஏகபோக முதலாளிகள் தலைமையிலான முதலாளித்துவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதும், அதனிடத்தில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் ஆட்சியை நிறுவுவதும், இந்திய சமுதாயம் கூக்குரலிடும் ஆழமான புரட்சிகர மாற்றங்களுக்கான பாதையைத் திறப்பதற்கான முதல் மற்றும் அவசியமான படியாகும். பெண்கள் மற்றும் அனைத்து உழைக்கும் மக்களின் கைகளில் அரசியல் அதிகாரம் தேவை. அதன் மூலம், அவர்கள் நிகழ்ச்சி நிரலைத் தீர்மானிக்கவும், அவர்களின் வாழ்க்கையை பாதிக்கும் முக்கியமான முடிவுகளை எடுக்கவும், அவர்களின் நிலைமைகளை மாற்றவும் முடியும். தற்போது முதலாளிகளின் தனிச் சொத்தாக இருக்கும் உற்பத்திச் சாதனங்கள் சமுதாயத்தின் சொத்தாக மாற்றப்பட வேண்டும், இதன் மூலம் பொருளாதாரம் முதலாளிகளின் பேராசையை அல்லாமல், மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதை உறுதிசெய்யும் வகையில் மாற்றியமைக்க முடியும். இது மட்டுமே பெண்களின் முழுமையான விடுதலைக்கும், சமூக வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் அவர்களின் முழுப் பங்கேற்பிற்கும் பாதையைத் திறக்கும்.
2024 சர்வதேச மகளிர் தினத்தில், பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அனைத்து முற்போக்கு மற்றும் சனநாயக சக்திகளும் ஒன்றுபடுமாறு இந்திய கம்யூனிஸ்ட் கெதர் கட்சி அழைப்பு விடுக்கிறது. பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான சுரண்டல், ஒடுக்குமுறை மற்றும் பாகுபாடுகளுக்கு எதிரான போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம்!