மராட்டிய மாநில சட்டமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் நாக்பூரில், அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (AITUC – ஏஐடியூசி) ஒரு பெரிய பேரணியை 18 டிசம்பர் 2023 அன்று நடத்தியது. மாநிலம் முழுவதிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள், குறிப்பாக பெண்கள் திரண்டு வந்து, அரசாங்கத்தின் தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத மற்றும் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக வீதிகளில் இறங்கிப் போராட முன்வந்தனர்.
இந்த பேரணிக்கு மாநிலத்தின் அனைத்து மூலைகளிலிருந்தும் திரண்ட தொழிலாளர்கள் நாக்பூரில் உள்ள ஜீரோ மைல் பாயிண்டில் சாதனை படைக்கும் எண்ணிக்கையில் கூடியிருந்தனர். பேரணி, வெரைட்டி சவுக் வரை நீண்டிருந்ததால், பல தொழிலாளர்கள் ஏற்கனவே கூட்டம் நிரம்பி வழிந்த ஆர்ப்பாட்ட இடத்தை அடையக் கூட முடியவில்லை.
ஆஷா, அங்கன்வாடி, பள்ளி சத்துணவு, கட்டுமானம், கிராம பஞ்சாயத்து, மின்சாரம், வீட்டுப் பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் நாக்பூரில் ஊர்வலமாகச் சென்று, உழைக்கும் மக்களுக்கு வாழ்வாதாரம் வழங்கத் தவறிய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
ஏஐடியுசி நடத்திய ஒரு மாத கால மக்கள் விழிப்புணர்வு பயணத்தின் (ஜன் ஜாக்ரன் யாத்திரா) ஒரு பகுதியாக இந்தப் பேரணி இருந்தது. மகாராஷ்டிராவின் கோலாப்பூர் மாவட்டத்தில் நவம்பர் 20 அன்று தொடங்கிய இந்தப் பயணம், சிந்துதுர்க், ரத்னகிரி, ராய்காட், மும்பை, தானே, நாசிக், ஔரங்காபாத், பூனே, லத்தூர், நாந்தேட், அகோலா, கட்சிரோலி, கோண்டியா மற்றும் பண்டாரா ஆகிய இடங்களுக்கும் சென்று, மாநிலத்தின் 36 மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் செய்தது. ஒவ்வொரு மாவட்டத்திலும் கூட்டங்கள் நடத்தப்பட்டன. இந்தப் பயணத்தை வரவேற்கும் வகையில் பல இடங்களில் இருசக்கரப் பேரணிகள் நடத்தப்பட்டன.
பேரணியின் முக்கிய கோரிக்கைகள் பின்வருமாறு : வேலைநிறுத்தம் செய்யும் அங்கன்வாடி ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்று செயல்படுத்துவது, நான்கு தொழிலாளர் தொகுப்புச் சட்டங்களை இரத்து செய்தல், தனியார்மயமாக்கும் கொள்கை மற்றும் தேசிய சொத்துக்களைப் பணமாக்குதல் கொள்கையை திரும்பப் பெறுதல், 8 மணி நேர வேலைக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 26,000-த்தை நிர்ணயித்தல், அனைத்து குடிமக்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.10,000-த்தை அகவிலைப்படியுடன் சேர்த்து கிடைக்கச் செய்தல், பொது விநியோக முறையை வலுப்படுத்துதல், தேசிய கல்விக் கொள்கையை திரும்பப் பெறுதல், திட்டப் பணியாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு வழங்குதல், தனியார் நிறுவனங்களின் மூலம் (அவுட்சோர்சிங்) மூலம் பணியாளர்களை நியமிக்கும் மகாராஷ்டிர அரசின் முடிவை ரத்து செய்துவிட்டு, அரசே பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்றும், மாநில வரவு-செலவு திட்டத்தில் (பட்ஜெட்டில்) கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளுக்கு ஒவ்வொரு துறைக்கும் 10% ஒதுக்க வேண்டும் என்றும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் மற்றும் அறிவுத் துறையினரை விடுவிக்கவும், தலித்துகள், பழங்குடியினர், பெண்கள் மற்றும் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
டிசம்பர் 18 அன்று, ஏஐடியுசி-யின் பிரதிநிதிகள் மகாராஷ்டிர முதலமைச்சரிடம் கோரிக்கைகள் பட்டியலை சமர்ப்பித்தனர். இதை மேலும் விவாதிப்பதற்காக மும்பையில் ஒரு கூட்டத்தை கூட்ட முதலமைச்சர் ஒப்புக்கொண்டிருக்கிறார்.
குறைந்த பட்ச ஊதியத்தை மேலும் ஆய்வு செய்ய வேண்டும்.
ஜன் ஜாக்ரான் யாத்ரா தமிழ்நாட்டில் நடத்தப்பட வேண்டும்