தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தின் நிருபர் அறிக்கை
மே 16-21 முதல், தொழிலாளர் ஒற்றுமை இயக்கம் (எம்இசி) பல்வேறு தொழிற் பேட்டைப் பகுதிகள், தொழிலாளர்கள் குடியிருப்புக்கள் மற்றும் தில்லி மெட்ரோ இரயில் நிலையங்களில் தொடர்ச்சியாக மக்கள் திரள் நடவடிக்கைகளை ஏற்பாடு செய்து நடத்தியது.
ஒவ்வொரு மாலையிலும், தெற்கு தில்லியில் உள்ள ஓக்லா தொழிற்பேட்டை பகுதி 1 மற்றும் 2 இல் உள்ள முக்கிய இடங்களில் தெரு முனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. இந்தக் கூட்டங்கள் மல்யுத்த வீராங்கனைகளின் கோரிக்கைகளை ஆதரிப்பதற்காகவும், பணியிடத்திலும் சமூகத்திலும் பெண்கள் மீதான பாலியல் சுரண்டலை எதிர்ப்பதற்காகவும் ஏற்பாடு செய்யப்பட்டன. அப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்யும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் இக்கூட்டங்களில் கலந்து கொண்டனர்.
மே 19 அன்று, கல்காஜி பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி, ஓக்லா 2 ஆம் கட்டத்தின் தொழிற்பேட்டை பகுதிகள், தொழிலாளர்கள் குடியிருப்பு காலனிகள் மற்றும் ஹர்கேஷ் நகர் மெட்ரோ நிலையம் வழியாக ஒரு கண்டன அணிவகுப்பு நடத்தப்பட்டது, இது தொழிற்பேட்டையின் இசட் பிளாக்கில் பொதுக் கூட்டத்தில் முடிவடைந்தது. அணிவகுப்பில் பங்கேற்றவர்கள், “பெண் மல்யுத்த வீராங்கனைகள் மீது காவல்துறை நடத்திய தாக்குதல் ஒழிக!”, “குற்றவாளிகளைத் தண்டிக்கவும்!”, “நாட்டுக்குப் பெருமை சேர்த்த எங்கள் மகளிருக்கு நீதி வேண்டும்!”, “பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தாரீர்!”!”, “பணியிடத்தில் பாலியல் சுரண்டல் ஒழிக!” என்பன போன்ற என்ற முழக்கங்களைக் கொண்ட பெரிய தட்டிகளை அவர்கள் ஏந்தியிருந்தனர். அவர்கள் மல்யுத்த வீரர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாகவும், வேலை செய்யும் இடங்களிலும் தெருக்களிலும் பெண்களுக்கு நிகழும் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராகவும் போர்க்குணமிக்க முழக்கங்களை எழுப்பினர்.
தொழிலாளர் ஒற்றுமை இயக்கம் (MEC), இந்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு (IFTU), அனைத்திந்திய தொழிற்சங்கங்களின் மத்திய கவுன்சில் (AICCTU) மற்றும் இந்திய தொழிற்சங்கங்களின் மையம் (CITU) ஆகியவை இணைந்து இந்த அணிவகுப்பை ஏற்பாடு செய்திருந்தனர். அணிவகுப்பின் முடிவில் கூட்டத்தில் பங்கேற்ற அமைப்புகளின் பிரதிநிதிகள் உரையாற்றினர். மல்யுத்த வீரர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாகவும், பெண்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளுக்காகவும் தொழிலாளர்கள் குரல் எழுப்ப வேண்டுமென அவர்கள் அழைப்பு விடுத்தனர்.
மே 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் தில்லியில் உள்ள மதன்பூர் காதர் என்ற மீள்குடியேற்ற காலனியில் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளில் தெரு முனைக் கூட்டங்களும், ஊர்வலங்களும் நடத்தப்பட்டன.